Author: Pulan

  • செஞ்ஞா யிற்றுச் செலவும்

    புறநானூறு

    செஞ்ஞா யிற்றுச் செலவும்
    அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
    பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும்
    வளி திரிதரு திசையும்
    வறிது நிலைஇய காயமும் என்றிவை
    சென்றளந்து அறிந்தார் போல என்றும்
    இனைத்து என்போரும் உளரே அனைத்தும்
    அறிவுஅறி வாகச் செறிவினை யாகிக்
    களிறுகவுள் அடுத்த எறிகல் போல
    ஒளித்த துப்பினை ஆதலின் வெளிப்பட
    யாங்ஙனம் பாடுவர் புலவர் கூம்பொடு
    மீப்பாய் களையாது மிசைப் பரந் தோண்டாது
    புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர்
    இடைப்புலப் பெருவழிச் சொரியும்
    கடல்பல் தாரத்த நாடுகிழ வோயே

    உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

  • நெல் அரியும் இருந் தொழுவர்

    புறநானூறு

    நெல் அரியும் இருந் தொழுவர்
    செஞ் ஞாயிற்று வெயில் முனையின்
    தென் கடல்திரை மிசைப்பா யுந்து
    திண் திமில் வன் பரதவர்
    வெப் புடைய மட் டுண்டு
    தண் குரவைச் சீர்தூங் குந்து
    தூவற் கலித்த தேம்பாய் புன்னை
    மெல்லிணர்க் கன்ணி மிலைந்த மைந்தர்
    எல்வளை மகளிர்த் தலைக்கை தரூஉந்து
    வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல்
    முண்டகக் கோதை ஒண்டொடி மகளிர்
    இரும் பனையின் குரும்பை நீரும்
    பூங் கரும்பின் தீஞ் சாறும்
    ஓங்கு மணற் குலவுத் தாழைத்
    தீ நீரோடு உடன் விராஅய்
    முந்நீர் உண்டு முந்நீர்ப் பாயும்
    தாங்கா உறையுள் நல்லூர் கெழீஇய
    ஒம்பா ஈகை மாவேள் எவ்வி
    புனலம் புதவின் மிழலையடு_ கழனிக்
    கயலார் நாரை போர்வில் சேக்கும்
    பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்
    குப்பை நெல்லின் முத்தூறு தந்த
    கொற்ற நீள்குடைக் கொடித்தேர்ச் செழிய
    நின்று நிலைஇயர் நின் நாண்மீன் நில்லாது
    படாஅச் செலீஇயர் நின்பகைவர் மீனே
    நின்னொடு தொன்றுமூத்த உயிரினும் உயிரொடு
    நின்று மூத்த யாக்கை யன்ன நின்
    ஆடுகுடி மூத்த விழுத்திணைச் சிறந்த
    வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த
    இரவன் மாக்கள் ஈகை நுவல
    ஒண்டொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய
    தண்கமழ் தேறல் மடுப்ப மகிழ்சிறந்து
    ஆங்குஇனிது ஒழுகுமதி பெரும ஆங்கது
    வல்லுநர் வாழ்ந்தோர் என்ப தொல்லிசை
    மலர்தலை உலகத்துத் தோன்றிப்
    பலர்செலச் செல்லாது நின்று விளிந் தோரே

    மாங்குடி கிழவர்

  • கண்ணி கார் நறுங்கொன்றை காமர்

    புறநானூறு

    கண்ணி கார் நறுங்கொன்றை காமர்
    வண்ண மார்பின் தாருங் கொன்றை
    ஊர்தி வால் வெள் ஏறே சிறந்த
    சீர் கெழு கொடியும் அவ்வேறு என்ப
    கறை மிடறு அணியலும் அணிந்தன்று அக்கறை
    மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே
    பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று அவ்வுருத்
    தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்
    பிறை நுதல் வண்ணம் ஆகின்று அப் பிறை
    பதினெண் கணனும் ஏத்தவும் படுமே
    எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய
    நீரறவு அறியாக் கரகத்துத்
    தாழ் சடைப் பொலிந்த அருந்தவத்தோற்கே

    பெருந்தேவனார்

  • சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்

    புறநானூறு

    சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்
    நூற் றிதழ் அலரின் நிறை கண் டன்ன
    வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து
    வீற்றிருந் தோரை எண்ணுங் காலை
    உரையும் பாட்டும் உடையோர் சிலரே
    மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே
    புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
    வலவன் ஏவா வான ஊர்தி
    எய்துப என்ப தம் செய்வினை முடித்து எனக்
    கேட்பல் எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி
    தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்
    மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும்
    அறியா தோரையும் அறியக் காட்டித்
    திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து
    வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்
    வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
    அருள வல்லை ஆகுமதி அருளிலர்
    கொடா அமை வல்லர் ஆகுக
    கெடாஅத் துப்பின்நின் பகைஎதிர்ந் தோரே

    உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

  • அடுநை யாயினும் விடுநை யாயினும்

    புறநானூறு

    அடுநை யாயினும் விடுநை யாயினும்
    நீ அளந் தறிதி நின் புரைமை வார்தோல்
    செயறியரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்
    பொலஞ்செய் கழங்கின் தெற்றி யாடும்
    தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக்
    கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய்
    நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து
    வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும்
    கடிமரம் தடியும் ஓசை தன்ஊர்
    நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப
    ஆங்குஇனி திருந்த வேந்தனொடு ஈங்குநின்
    சிலைத்தார் முரசும் கறங்க
    மலைத்தனை எண்பது நாணுத்தகவு உடைத்தே

    ஆலத்தூர் கிழார்

  • வெளிறில் நோன்காழ்ப் பணைநிலை முனைஇக்

    புறநானூறு

    வெளிறில் நோன்காழ்ப் பணைநிலை முனைஇக்
    களிறுபடிந்து உண்டெனக் கலங்கிய துறையும்
    கார்நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல்
    சூர்நவை முருகன் சுற்றத்து அன்ன நின்
    கூர்நல் அம்பின் கொடுவில் கூளியர்
    கொள்வது கொண்டு கொள்ளா மிச்சில்
    கொள்பதம் ஒழிய வீசிய புலனும்
    வடிநவில் நவியம் பாய்தலின் ஊர்தொறும்
    கடிமரம் துளங்கிய காவும் நெடுநகர்
    வினைபுனை நல்லில் வெவ்வெரி நைப்பக்
    கனைஎரி உரறிய மருங்கும் நோக்கி
    நண்ணார் நாண நாள்தொறும் தலைச்சென்று
    இன்னும் இன்னபல செய்குவன் யாவரும்
    துன்னல் போகிய துணிவினோன் என
    ஞாலம் நெளிய ஈண்டிய வியன்படை
    ஆலங் கானத்து அமர்கடந்து அட்ட
    கால முன்ப நின் கண்டனென் வருவல்
    அறுமருப்பு எழிற்கலை புலிப்பால் பட்டெனச்
    சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை
    பூளை நீடிய வெருவரு பறந்தலை
    வேளை வெண்பூக் கறிக்கும்
    ஆளில் அத்தம் ஆகிய காடே

    கல்லாடனார்

  • உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை

    புறநானூறு

    உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை
    நிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற
    ஏம முரசம் இழுமென முழங்க
    நேமி யுய்த்த நேஎ நெஞ்சின்
    தவிரா ஈகைக் கவுரியர் மருக
    செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ
    பொன் னோடைப் புகர் அணிநுதல்
    துன்னருந் திறல் கமழ்கடா அத்து
    எயிரு படையாக எயிற்கதவு இடாஅக்
    கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கில்
    பெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்து
    மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்
    கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி
    நிலம் பெயரினும் நின்சொற் பெயரல்
    பொலங் கழற்காற்புலர் சாந்தின்
    விலங் ககன்ற வியன் மார்ப
    ஊர் இல்ல உயவு அரிய
    நீர் இல்ல நீள் இடைய
    பார்வல் இருக்கைக் கவிகண் நோக்கிற்
    செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்
    அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்
    திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந்து உயவும்
    உன்ன மரத்த துன்னருங் கவலை
    நின்நசை வேட்கையின் இரவலர் வருவர் அது
    முன்னம் முகத்தின் உணர்ந்து அவர்
    இன்மை தீர்த்தல் வன்மை யானே

    இரும்பிடர்த் தலையார்

  • மண் திணிந்த நிலனும்

    புறநானூறு

    மண் திணிந்த நிலனும்
    நிலம் ஏந்திய விசும்பும்
    விசும்பு தைவரு வளியும்
    வளித் தலைஇய தீயும்
    தீ முரணிய நீரும் என்றாங்கு
    ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
    போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்
    வலியும் தெறலும் அணியும் உடையோய்
    நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும்நின்
    வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும்
    யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந
    வான வரம்பனை நீயோ பெரும
    அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ
    நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
    ஈரைம்பதின் மரும்பொருது களத்து ஒழியப்
    பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
    பாஅல் புளிப்பினும் பகல்இருளினும்
    நாஅல் வேதநெறி திரியினும்
    திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
    நடுக்கின்றி நிலியரோ வத்தை அடுக்கத்துச்
    சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
    அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
    முத்தீ விளக்கிற் றுஞ்சும்
    பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே

    முரஞ்சியூர் முடிநாகராயர்

  • நஞ்சுடை வால் எயிற்று ஐந்தலை சுமந்த

    புறநானூறு

    நஞ்சுடை வால் எயிற்று ஐந்தலை சுமந்த
    வேக வெந்திறல் நாகம் புக்கென
    விசும்புதீப் பிறப்பத் திருகிப் பசுங்கொடிப்
    பெருமலை விடரகத்து உரும்எறிந் தாங்குப்
    புள்ளுறு புன்கண் தீர்த்த வெள் வேல்
    சினங்கெழு தானைச் செம்பியன் மருக
    கராஅம் கலித்த குண்டுகண் அகழி
    இடம்கருங் குட்டத்து உடந்தொக்கு ஓடி
    யாமம் கொள்பவர் சுடர்நிழல் கதூஉம்
    கடுமுரண் முதலைய நெடுநீர் இலஞ்சிச்
    செம்புஉறழ் புரிசைச் செம்மல் மூதூர்
    வம்புஅணி யானை வேந்துஅகத் துண்மையின்
    நல்ல என்னாது சிதைத்தல்
    வல்லையால் நெடுந்தகை செருவத் தானே

    மாறோக்கத்து நப்பசலையார்

  • ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின்

    புறநானூறு

    ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின்
    யானையும் மலையின் தோன்றும் பெரும நின்
    தானையும் கடலென முழங்கும் கூர்நுனை
    வேலும் மின்னின் விளங்கும் உலகத்து
    அரைசுதலை பனிக்கும் ஆற்றலை யாதலின்
    புரைதீர்ந் தன்று அது புதுவதோ அன்றே
    தண்புனற் பூசல் அல்லது நொந்து
    களைக வாழி வளவ என்று நின்
    முனைதரு பூசல் கனவினும் அறியாது
    புலிபுறங் காக்கும் குருளை போல
    மெலிவில் செங்கோல் நீபுறங் காப்பப்
    பெருவிறல் யாணர்த் தாகி அரிநர்
    கீழ்மடைக் கொண்ட வாளையும் உழவர்
    படைமிளிர்ந் திட்ட யாமையும் அறைநர்
    கரும்பிற் கொண்ட தேனும் பெருந்துறை
    நீர்தரு மகளிர் குற்ற குவளையும்
    வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தயரும்
    மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந
    மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி
    நிலவரை இழிதரும் பல்யாறு போலப்
    புலவ ரெல்லாம் நின்நோக் கினரே
    நீயே மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக்
    கூற்றுவெகுண் டன்ன முன்பொடு
    மாற்றுஇரு வேந்தர் மண்நோக் கினையே

    இடைக்காடனார்