Category: புறநானூறு

  • யாண்டுபல வாக நரையில ஆகுதல்

    புறநானூறு

    யாண்டுபல வாக நரையில ஆகுதல்
    யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்
    மாண்டஎன் மனைவியோடு மக்களும் நிரம்பினர்
    யான்கண் டனையர்என் இளையரும் வேந்தனும்
    அல்லவை செய்யான் காக்க அதன்தலை
    ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்
    சான்றோர் பலர் யான் வாழும் ஊரே

    பிசிராந்தையர்

  • அணங்குடை அவுணர் கணம்கொண்டு ஒளித்தெனச்

    புறநானூறு

    அணங்குடை அவுணர் கணம்கொண்டு ஒளித்தெனச்
    சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது
    இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து
    இடும்பைகொள் பருவரல் தீரக் கடுந்திறல்
    அஞ்சன் உருவன் தந்து நிறுத்தாங்கு
    அர சிழந்து இருந்த அல்லற் காலை
    முரசுஎழுந்து இரங்கும் முற்றமொடு கரைபொருது
    இரங்குபுனல் நெரிதரு மிகுபெருங் காவிரி
    மல்லல் நன்னாட்டு அல்லல் தீரப்
    பொய்யா நாவிற் கபிலன் பாடிய
    மையணி நெடுவரை ஆங்கண் ஒய்யெனச்
    செருப்புகல் மறவர் செல்புறம் கண்ட
    எள்ளறு சிறப்பின் முள்ளூர் மீமிசை
    அருவழி இருந்த பெருவிறல் வளவன்
    மதிமருள் வெண்குடை காட்டி அக்குடை
    புதுமையின் நிறுத்த புகழ்மேம் படுந
    விடர்ப்புலி பொறித்த கோட்டைச் சுடர்ப் பூண்
    சுரும்பார் கண்ணிப் பெரும்பெயர் நும்முன்
    ஈண்டுச்செய் நல்வினை யாண்டுச்சென்று உணீஇயர்
    உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின்
    ஆறுகொள் மருங்கின் மாதிரம் துழவும்
    கவலை நெஞ்சத்து அவலந் தீர
    நீதோன் றினையே நிரைத்தார் அண்ணல்
    கல்கண் பொடியக் கானம் வெம்ப
    மல்குநீர் வரைப்பில் கயம்பல உணங்கக்
    கோடை நீடிய பைதறு காலை
    இருநிலம் நெளிய ஈண்டி
    உரும்உரறு கருவிய மழைபொழிந் தாங்கே

    மாறோக்கத்து நப்பசலையார்

  • விளைபதச் சீறிடம் நோக்கி வளைகதிர்

    புறநானூறு

    விளைபதச் சீறிடம் நோக்கி வளைகதிர்
    வல்சி கொண்டு அளை மல்க வைக்கும்
    எலிமுயன் றனைய ராகி உள்ளதம்
    வளன்வலி உறுக்கும் உளம் இலாளரோடு
    இயைந்த கேண்மை இல்லா கியரோ
    கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென
    அன்று அவண் உண்ணா தாகி வழிநாள்
    பெருமலை விடரகம் புலம்ப வேட்டெழுந்து
    இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும்
    புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து
    உரனுடை யாளர் கேண்மையடு
    இயைந்த வைகல் உளவா கியரோ

    சோழன் நல்லுருத்திரன்

  • யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய

    புறநானூறு

    யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய
    பாணர் காண்க இவன் கடும்பினது இடும்பை
    யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந் தன்ன
    ஊணொலி அரவந் தானும் கேட்கும்
    பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
    முட்டை கொண்டு வற்புலம் சேரும்
    சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச்
    சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்
    இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும் கண்டும்
    மற்றும் மற்றும் வினவுதும் தெற்றெனப்
    பசிப்பிணி மருத்துவன் இல்லம்
    அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே

    சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்

  • தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி

    புறநானூறு

    தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
    வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
    நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
    கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
    உண்பது நாழி உடுப்பவை இரண்டே
    பிறவும் எல்லாம் ஓரொக் குமே
    அதனால் செல்வத்துப் பயனே ஈதல்
    துய்ப்பேம் எனினே தப்புந பலவே

    மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்

  • படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்

    புறநானூறு

    படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
    உடைப்பெருஞ் செல்வர் ஆயினும் இடைப்படக்
    குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
    இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
    நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
    மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
    பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே

    பாண்டியன் அறிவுடை நம்பி

  • நாடா கொன்றோ காடா கொன்றோ

    புறநானூறு

    நாடா கொன்றோ காடா கொன்றோ
    அவலா கொன்றோ மிசையா கொன்றோ
    எவ்வழி நல்லவர் ஆடவர்
    அவ்வழி நல்லை வாழிய நிலனே

    ஔவையார்

  • நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே

    புறநானூறு

    நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே
    மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்
    அதனால் யான்உயிர் என்பது அறிகை
    வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே

    மோசிகீரனார்

  • கால்பார் கோத்து ஞாலத்து இயக்கும்

    புறநானூறு

    கால்பார் கோத்து ஞாலத்து இயக்கும்
    காவற் சாகாடு உகைப்போன் மாணின்
    ஊறுஇன்றாகி ஆறுஇனிது படுமே
    உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும்
    பகைக்கூழ் அள்ளற் பட்டு
    மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே

    தொண்டைமான் இளந்திரையன்

  • காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே

    புறநானூறு

    காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே
    மாநிறைவு இல்லதும் பன்நாட்கு ஆகும்
    நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
    வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்
    அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
    கோடி யாத்து நாடுபெரிது நந்தும்
    மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
    வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
    பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
    யானை புக்க புலம்போலத்
    தானும் உண்ணான் உலகமும் கெடுமே

    பிசிராந்தையார்