Category: புறநானூறு

  • வெள்ளி தென்புலத்து உறைய விளைவயல்

    புறநானூறு

    வெள்ளி தென்புலத்து உறைய விளைவயல்
    பள்ளம் வாடிய பயன்இல் காலை
    இரும்பறைக் கிணைமகன் சென்றவன் பெரும்பெயர்
    சிறுகுடி கிழான் பண்ணன் பொருந்தித்
    தன்நிலை அறியுநன் ஆக அந்நிலை
    இடுக்கண் இரியல் போக உடைய
    கொடுத்தோன் எந்தை கொடைமேந் தோன்றல்
    நுண்ணூல் தடக்கையின் நாமருப் பாக
    வெல்லும் வாய்மொழிப் புல்லுடை விளைநிலம்
    பெயர்க்கும் பண்ணற் கேட்டிரோ அவன்
    வினைப்பகடு ஏற்ற மேழிக் கிணைத்தொடா
    நாடொறும் பாடேன் ஆயின் ஆனா
    மணிகிளர் முன்றில் தென்னவன் மருகன்
    பிணிமுரசு இரங்கும் பீடுகெழு தானை
    அண்ணல் யானை வழுதி
    கண்மா றிலியர்என் பெருங்கிளைப் புரவே

    மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

  • வள் உகிர வயல் ஆமை

    புறநானூறு

    வள் உகிர வயல் ஆமை
    வெள் அகடு கண் டன்ன
    வீங்கு விசிப் புதுப் போர்வைத்
    தெண்கண் மாக்கிணை இயக்கி என்றும்
    மாறு கொண்டோர் மதில் இடறி
    நீறு ஆடிய நறுங் கவுள
    பூம்பொறிப் பணை எருத்தின
    வேறு வேறு பரந்து இயங்கி
    வேந்துடை மிளை அயல் பரக்கும்
    ஏந்து கோட்டு இரும்பிணர்த் தடக்கைத்
    திருந்து தொழிற் பல பகடு
    பகைப்புல மன்னர் பணிதிறை தந்து நின்
    நசைப்புல வாணர் நல்குரவு அகற்றி
    மிகப்பொலியர் தன் சேவடியத்தை என்று
    யாஅன் இசைப்பின் நனிநன்று எனாப்
    பலபிற வாழ்த்த இருந்தோர் தங்கோன்
    மருவ இன்நகர் அகன் கடைத்தலைத்
    திருந்துகழல் சேவடி குறுகல் வேண்டி
    வென் றிரங்கும் விறன் முரசினோன்
    என் சிறுமையின் இழித்து நோக்கான்
    தன் பெருமையின் தகவு நோக்கிக்
    குன்று உறழ்ந்த களி றென்கோ
    கொய் யுளைய மா என்கோ
    மன்று நிறையும் நிரை என்கோ
    மனைக் களமரொடு களம் என்கோ
    ஆங்கவை கனவுஎன மருள வல்லே நனவின்
    நல்கி யோனே நகைசால் தோன்றல்
    ஊழி வாழி பூழியர் பெருமகன்
    பிணர் மருப்பு யானைச் செருமிகு நோன்தாள்
    செல்வக் கடுங்கோ வாழி யாதன்
    ஒன்னாத் தெவ்வர் உயர்குடை பணிந்து இவன்
    விடுவர் மாதோ நெடிதோ நில்லாப்
    புல்லிளை வஞ்சிப் புறமதில் அலைக்கும்
    கல்லென் பொருநை மணலினும் ஆங்கண்
    பல்லூர் சுற்றிய கழனி
    எல்லாம் விளையும் நெல்லினும் பலவே

    குண்டுகட் பாலியாதனார்

  • நெடு நீர நிறை கயத்துப்

    புறநானூறு

    நெடு நீர நிறை கயத்துப்
    படு மாரித் துளி போல
    நெய் துள்ளிய வறை முகக்கவும்
    சூடு கிழித்து வாடுஊன் மிசையவும்
    ஊன் கொண்ட வெண் மண்டை
    ஆன் பயத்தான் முற்று அழிப்பவும்
    வெய்து உண்ட வியர்ப்பு அல்லது
    செய் தொழிலான் வியர்ப்பு அறியாமை
    ஈத்தோன் எந்தை இசைதனது ஆக
    வயலே நெல்லின் வேலி நீடிய கரும்பின்
    பாத்திப் பன்மலர்ப் பூத்த துப்பின
    புறவே புல்லருந்து பல்லா யத்தான்
    வில்இருந்த வெங்குறும் பின்று
    கடலே கால்தந்த கலம் எண்ணுவோர்
    கானற் புன்னைச் சினைநிலக் குந்து
    கழியே சிறுவெள் உப்பின் கொள்ளை சாற்றி
    பெருங்கல் நன்னாட்டு உமண்ஒலிக் குந்து
    அன்னநன் நாட்டுப் பொருநம் யாமே
    பொரா அப் பொருந ரேம்
    குணதிசை நின்று குடமுதற் செலினும்
    வடதிசை நின்று தென்வயிற் செலினும்
    தென்திசை நின்று குறுகாது நீடினும்
    யாண்டும் நிற்க வெள்ளி யாம்
    வேண்டியது உணர்ந்தோன் தாள்வா ழியவே

    கோவூர் கிழார்

  • வெள்ளி தோன்றப் புள்ளுக்குரல் இயம்ப

    புறநானூறு

    வெள்ளி தோன்றப் புள்ளுக்குரல் இயம்ப
    புலரி விடியல் பகடுபல வாழ்த்தித்
    தன்கடைத் தோன்றினும் இலனே பிறன் கடை
    அகன்கண் தடாரிப் பாடுகேட்டு அருளி
    வறன்யான் நீங்கல் வேண்டி என் அரை
    நிலந்தினச் சிதைந்த சிதாஅர் களைந்து
    வெளியது உடீஇ என் பசிகளைந் தோனே
    காவிரி அணையும் தாழ்நீர்ப் படப்பை
    நெல்விளை கழனி அம்பர் கிழவோன்
    நல்அரு வந்தை வாழியர் புல்லிய
    வேங்கட விறல்வரைப் பட்ட
    ஓங்கல் வானத்து உறையினும் பலவே

    கல்லாடனார்

  • மென் பாலான் உடன் அணைஇ

    புறநானூறு

    மென் பாலான் உடன் அணைஇ
    வஞ்சிக் கோட்டு உறங்கும் நாரை
    அறைக் கரும்பின் பூ அருந்தும்
    வன் பாலான் கருங்கால் வரகின்
    _____________________________________
    அங்கண் குறுமுயல் வெருவ அயல
    கருங்கோட்டு இருப்பைப் பூஉறைக் குந்து
    விழவின் றாயினும் உழவர் மண்டை
    இருங்கெடிற்று மிசையடு பூங்கள் வைகுந்து
    ____________கிணையேம் பெரும
    நெல் என்னாம் பொன் என்னாம்
    கனற்றக் கொண்ட நறவு என்னும்
    ____________மனை என்னா அவை பலவும்
    யான் தண்டவும் தான் தண்டான்
    நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை
    மண் நாணப் புகழ் வேட்டு
    நீர் நாண நெய் வழங்கிப்
    புரந்தோன் எந்தை யாம் எவன் தொலைவதை
    அன்னோனை உடையேம் என்ப இனி வறட்கு
    யாண்டு நிற்க வெள்ளி மாண்ட
    உண்ட நன்கலம் பெய்து நுடக்கவும்
    வந்த வைகல் அல்லது
    சென்ற எல்லைச் செலவு அறி யேனே

    புறத்திணை நன்னாகனார்

  • ஒண்பொறிச் சேவல் எடுப்ப ஏற்றெழுந்து

    புறநானூறு

    ஒண்பொறிச் சேவல் எடுப்ப ஏற்றெழுந்து
    தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர்
    நுண்கோல் சிறுகிணை சிலம்ப ஒற்றி
    நெடுங்கடை நின்று பகடுபல வாழ்த்தித்
    தன்புகழ் ஏத்தினெ னாக ஊன்புலந்து
    அருங்கடி வியன்நகர்க் குறுகல் வேண்டிக்
    கூம்புவிடு மென்பிணி அவிழ்த்த ஆம்பல்
    தேம்பாய் உள்ள தம்கமழ் மடர் உளப்
    பாம்பு உரி அன்ன வடிவின காம்பின்
    கழைபடு சொலியின் இழை அணி வாரா
    ஒண்பூங் கலிங்கம் உடீ இ நுண்பூண்
    வசிந்துவாங்கு நுசுப்பின் அவ்வாங்கு உந்திக்
    கற்புடை மடந்தை தற்புறம் புல்ல
    எற் பெயர்ந்த நோக்கி _______________
    __________________________ கற்கொண்டு
    அழித்துப் பிறந்ததென னாகி அவ்வழிப்
    பிறர் பாடுபுகழ் பாடிப் படர்பு அறி யேனே
    குறுமுலைக்கு அலமரும் பால் ஆர் வெண்மறி
    நரைமுக வூகமொடு உகளும் சென____
    _______________கன்றுபல கெழீ இய
    கான்கெழு நாடன் நெடுந்தேர் அவியன் என
    ஒருவனை உடையேன் மன்னே யானே
    அறான் எவன் பரிகோ வெள்ளியது நிலையே

    மாறோக்கத்து நப்பசலையார்

  • மதிநிலாக் கரப்ப வெள்ளி ஏர்தர

    புறநானூறு

    மதிநிலாக் கரப்ப வெள்ளி ஏர்தர
    வகைமாண் நல்லில்
    பொறிமலர் வாரணம் பொழுது அறிந்து இயம்ப
    பொய்கைப் பூமுகை மலரப் பாணர்
    கைவல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க
    இரவுப் புறம் பெற்ற ஏம வைகறைப்
    பரிசிலர் வரையா விரைசெய் பந்தர்
    வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன்
    நகைவர் குறுகின் அல்லது பகைவர்க்குப்
    புலியினம் மடிந்த கல்லளை போலத்
    துன்னல் போகிய பெரும்பெயர் மூதூர்
    மதியத்து அன்னஎன் அரிக்குரல் தடாரி
    இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து
    உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய்
    தள்ளா நிலையை யாகியர் எமக்கு என
    என்வரவு அறீஇச்
    சிறி திற்குப் பெரிது உவந்து
    விரும்பிய முகத்த னாகி என் அரைத்
    துரும்புபடு சிதாஅர் நீக்கித் தன் அரைப்
    புகைவிரிந் தன்ன பொங்குதுகில் உடீஇ
    அழல்கான் றன்ன அரும்பெறல் மண்டை
    நிழல்காண் தேறல் நிறைய வாக்கி
    யான்உண அருளல் அன்றியும் தான்உண்
    மண்டைய கண்ட மான்வறைக் கருனை
    கொக்குஉகிர் நிமிரல் ஒக்கல் ஆர
    வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும்
    விரவுமணி ஒளிர்வரும் அரவுஉறழ் ஆரமொடு
    புரையோன் மேனிப் பூந்துகில் கலிங்கம்
    உரைசெல அருளி யோனே
    பறைஇசை அருவிப் பாயல் கோவே

    திருத்தாமனார்

  • உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

    புறநானூறு

    உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
    பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
    பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்
    சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
    ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
    மூத்தோன் வருக என்னாது அவருள்
    அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்
    வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
    கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
    மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே

    ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்

  • வெள்ளியும் இருவிசும்பு ஏர்தரும் புள்ளும்

    புறநானூறு

    வெள்ளியும் இருவிசும்பு ஏர்தரும் புள்ளும்
    உயர்சினைக் குடம்பைக் குரல்தோற் றினவே
    பொய்கையும் போடுகண் விழித்தன பையச்
    சுடரும் சுருங்கின்று ஒளியே பாடெழுந்து
    இரங்குகுரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப
    இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி
    எஃகுஇருள் அகற்றும் ஏமப் பாசறை
    வைகறை அரவம் கேளியர் பலகோள்
    செய்தார் மார்ப எழுமதி துயில் எனத்
    தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி
    நெடுங்கடைத் தோன்றி யேனே அது நயந்து
    உள்ளி வந்த பரிசிலன் இவன் என
    நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்சூடு
    மணிக்கலன் நிறைந்த மணநாறு தேறல்
    பாம்புரித் தன்ன வான்பூங் கலிங்கமொடு
    மாரி யன்ன வண்மையின் சொரிந்து
    வேனில் அன்ன என் வெப்பு நீங்க
    அருங்கலம் நல்கி யோனே என்றும்
    செறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை
    அறுதொழில் அந்தணர் அறம்புரிந்து எடுத்த
    தீயடு விளங்கும் நாடன் வாய்வாள்
    வலம்படு தீவிற் பொலம்பூண் வளவன்
    எறிதிரைப் பெருங்கடல் இறுதிக்கண் செலினும்
    தெறுகதிர்க் கனலி தென்திசைத் தோன்றினும்
    என்னென்று அஞ்சலம் யாமே வென்வெல்
    அருஞ்சமம் கடக்கும் ஆற்றல் அவன்
    திருந்துகழல் நோன்தாள் தண்நிழ லேமே

    எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார்

  • தூர்ந்த கிடங்கின் சோர்ந்த ஞாயில்

    புறநானூறு

    தூர்ந்த கிடங்கின் சோர்ந்த ஞாயில்
    சிதைந்த இஞ்சிக் கதுவாய் மூதூர்
    யாங்கா வதுகொல் தானே தாங்காது
    படுமழை உருமின் இறங்கு முரசின்
    கடுமான் வேந்தர் காலை வந்து எம்
    நெடுநிலை வாயில் கொட்குவர் மாதோ
    பொருதாது அமருவர் அல்லர் போர் உழந்து
    அடுமுரண் முன்பின் தன்னையர் ஏந்திய
    வடிவேல் எ·கின் சிவந்த உண்கண்
    தொடியுறழ் முன்கை இளையோள்
    அணிநல் லாகத்து அரும்பிய சுணங்கே

    மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தார் ஆயத்தனார்